6 மணி நேரத்தில் கொள்ளையர்களைஅமுக்கிய போலீஸ்-ரூ. 25 லட்சம் நகை மீட்பு
சென்னை: சென்னை எழும்பூரில் தனியாக இருந்த 60 வயது பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை 6 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
சென்னை எழும்பூரில் மாயா என்ற 60 வயது பெண்மணி வீட்டில் வேலைகாரி பெண்ணுடன் தனியாக இருந்தார். அப்போது தீபக், சரோஜ் மற்றும் சுதீஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் வீட்டினுள் நுழைந்து மாயாவின் கைகளை துணியால் கட்டினர்.
பின்னர் அவரிடமிருந்த சாவியை பறித்து அலமாரியிலிருந்த ரூ.25 லட்சம் பெறுமானமுள்ள நகைகளை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து மாயாவின் கணவர் சிரானி போலீஸில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து அந்த 3 பேரையும் தேடினர்.
போலீஸ் விசாரணையில், திருடர்கள் மூவரும் அம்பத்தூரில் ஒரு தொழிற்சாலையில் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் விரைந்து சென்று மூன்று பேரையும் அமுக்கினர். கொள்ளை நடந்த ஆறே மணி நேரத்தில் திருடர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இந்த நகைகளுடன் சொந்த ஊரான பீகாருக்கு இன்றிரவு ரயிலில் செல்ல மூன்று பேரும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.