ஜெ.வின் 3வது அணி உருவாகாது: காங்கிரஸ்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயற்சித்து வரும் 3 வது அணிக்கான முயற்சிகள் வெற்றி பெறாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் மார்கெரட் ஆல்வா கூறியுள்ளார்.
சென்னை வந்த ஆல்வா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய அளவில் புதிதாக 3வது அணியை உருவாக்க ஜெயலலிதாவும், இன்னும் சில தலைவர்களும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இது பலிக்காது, வெற்றி பெறாது.
அரசியல் கணக்கின்படி, 3வது அணி அமைப்பதற்குப் போதுமான கட்சிகள் அங்கு இல்லை.
உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலையாக, வலுவாக உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்ள அரசிலிருந்து பிரிந்து போகும் எண்ணம் எந்தத் தோழமைக் கட்சிக்கும் இல்லை.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையின் விளைவாகததான் பார்க்க வேண்டும்.
அரசியலில் கோஷ்டி மோதல்கள் நடப்பது புதியதல்ல. அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது போலவே தமிழக காங்கிரஸ் கட்சியிலும் சில பிரிவுகள் உள்ளன. இருப்பினும் இதனால் கட்சியின் வளர்ச்சிக்கு எந்தப் பாதகமும் இல்லை.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. இருந்தாலும் கட்சி வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறார்கள்.
திமுக அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் தர வேண்டும் என்று காங்கிரஸார் கோருவதில் எந்தத் தவறும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அதுபோல இங்கு காங்கிரஸுக்கு இடம் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது.
கோவா, மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தந்துள்ளது காங்கிரஸ். கோவாவில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை தந்துள்ளோம். மகாராஷ்டிராவில் சில முக்கிய இலாகாக்கள் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸுக்குத் தரப்பட்டுள்ளது என்றார் ஆல்வா.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற ஆல்வா அங்கு ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications