வைகோ மீது நடவடிக்கை-இளங்கோவன் வலியுறுத்தல்
சென்னை:விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரித்துப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது முதல்வர் கருணாநிதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் கடத்திக் கொண்டு போய் சிறை வைத்துள்ளனர் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிறகும் கூட விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என அறிக்கை விடுகிறார் வைகோ.
தொடர்ந்து இதேபோல அவர் பேசி வந்தால் அவர் மீது திமுக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர், முதல்வர். வைகோ மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புலிகள் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது. தேவைப்பட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் கொடுஞ்செயலால்தான் 1991ல் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். அதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை தொடர்ந்து தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வர வேண்டும். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அதிக விழிப்புணர்வுடன் தமிழக அரசு இருக்க வேண்டும்.
உ.பி.தேர்தலில் தற்போது முலாயம் சிங் யாதவ் மற்ற கட்சிகளை விட கொஞ்சம் முன்னணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக ஜெயலலிதா பிரசாரம் செய்துள்ளதால் அவரது நிலை மேலும் கவலைக்கிடமாகி, கடைசி இடத்துக்குத் தள்ளப்படப் போகிறார். பல தொகுதிகளில் முலாயம் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலைதான் அங்கு உள்ளது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications