பைக் தராததால் ஓடிய மணமகன்நின்றது கல்யாணம்-3 பேர் கைது
திருவண்ணாமலை:வரதட்சணையாக தர வேண்டிய மோட்டார் சைக்கிள் வராததால், கோபமடைந்த மணமகன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மகேஸ்வரி. இவர் சென்னையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிறுபாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ்காரர் ரவிக்கும் திருமணம் நிச்சயமானது.
30ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்தன்று மோட்டார் சைக்கிள் தருவதாக மணமகள் வீட்டார் வாக்களித்திருந்தினர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. மணமகன் வீட்டிலேயே திருமணத்தை நடத்த முடிவாகியிருந்தது.
இதனால் மணமகள் வீட்டார் சிறுபாக்கம் கிராமத்துக்கு மணமகளுடன் வந்து சேர்ந்தனர். ஆனால் சொன்னபடி மோட்டார் சைக்கிளை அவர்கள் கொண்டு வரவில்லை. இதையடுத்து மணமகன் வீட்டார் பிரச்சினை எழுப்பினர்.
சொன்னபடி பைக் தந்தால்தான் கல்யாணம் என்று கறாராக கூறியுள்ளனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கடைகள் விடுமுறை என்பதால் பைக் வாங்க முடியவில்லை. கல்யாணம் முடிந்த பின்னர் வாங்கித் தந்து விடுவதாக கூறியுள்ளனர்.
இதை மணமகன் வீட்டார் ஏற்கவில்லை. இந்த நிலையில் விடிகாலை 4 மணிக்கு பெண் அழைப்பு நடந்தது. ஆனால் அப்போது மணமகன் அங்கு வரவில்லை. வீட்டிலும் அவர் இல்லை. மேலும், மோட்டார் சைக்கிள் தராமர் கல்யாணம் நடக்காது. அனைவரும் வெளியேறுங்கள் என்று மணமகனின் வீட்டார் கூறி மணமகள் வீட்டாரை வெளியேற்றி விட்டனர்.
அதிர்ந்து போன அவர்கள் நேராக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ரவியின் சித்தப்பா தர்மலிங்கம், சகோதரி கவிதா, தம்பி மஜ்னு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.