ஓரிரு மாதத்தில் புதிய கட்சி-சரத்குமார்
சென்னை:அரசியல் எனக்கொன்றும் புதியதல்ல, அரசியல் சாக்கடை, ஊழல் நிறைந்து என ஒதுங்கியிருப்பவர்களை ஓரிரு மாதத்தில் நான் தொடங்கும் கட்சியில் இணைத்து மக்களுக்காக பாடுபடுவேன் என நடிகர் சரத்குமார் கூறினார்.
விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா முடிந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெருந்தலைவர் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது 2 ஆண்டு காலமாக சிந்தித்து, அரசியல் கட்சிகளிலிருந்து விலகிய பின் இப்போது அந்த பணியை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த மணிமண்டபம் என் தனிப்பட்ட பெயரில் அமையாது. காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை என்ற பெயரில் அமையும். இந்த மணி மண்டபம் எப்படி அமைய வேண்டும் என ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. 6 மாதத்திற்கு பிறகு ஆய்வு முடிவுப்படி மண்டப பணிகள் தீவிரமடையும்.
மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவின் போது ஏற்பட்ட சம்பவங்கள், அரசியல் கட்சி துவங்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டன. அதற்காக முயற்சியில் இறங்கிவிட்டோம். இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிடுவோம்.
இன்னமும் இரண்டு மாதத்திற்கு கட்சி தொடங்கப்பட்டுவிடும். எங்கள் தனித்துவத்துடன் விளங்கும். மக்களாட்சியாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும்.
எனக்கு ஒன்றும் அரசியல் புதிதல்ல. நாங்கள் தொடங்கும் அரசியல் கட்சி யாருக்கும், விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் கூட போட்டியாக இருக்காது.
அரசியல் சாக்கடை என ஒதுக்கியுள்ளவர்களை இந்த கட்சியில் இணைப்போம். காமராஜர் வழியை பின்பற்றுவோம்.
அவருடைய ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு மக்களிடம் கேட்போம். மக்களுக்காக இந்த கட்சி பாடுபடும்.
எந்த இயக்கமும் அரசியல் கட்சியாக மாறுவது இயல்பு, எங்கள் அமைப்பும் அரசியல் கட்சியாகும்.
மக்களுக்கு என்ன தேவை, இளைஞர்களுக்கு எப்படி நம்பிக்கையோடு இருப்பது என்பது குறித்து விவாதித்து அவர்களுக்காக பாடுபடும் வகையில் தன்னலமற்ற கட்சியாக இது இருக்கும்.
புதிய கட்சி ஆரம்பிப்பதால் என்னுடைய சினிமா சம்பந்தப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாது.
காமராஜர் மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு நிர்பந்தம் காரணமாக மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்ணான்டஸ் வரவில்லை.
சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவரும் யாதவ சமூகத்தின் தலைவருமான கோபாலகிருஷ்ணன் மணிமண்டபம் கட்டுவதற்கும், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு என்ற நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications