கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வருகிற 31ம் தேதி அறிவிப்பதாக தனி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோவை சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் காவல் நீட்டிப்புக்காக சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
அப்போது தங்களுக்கு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை தயவு செய்து அறிவிக்குமாறு நீதிபதி உத்திராபதியை வேண்டிக் கொண்டனர். அதற்குப் பதிலளித்த நீதிபதி, வருகிற 31ம் தேதியன்று, தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications