புலிகளின் விமானங்களை தாக்கும் திறன்இலங்கையிடம் இல்லை-முன்னாள் ராணுவ தளபதி
கொழும்பு: இலங்கை ராணுவ விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஹரிகுணதிலகே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை விமானப்படையிடம் உள்ள கேபிர் ரக விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது.
மரங்களை அடியோடு வெட்டித் தான் வீழ்த்த முடியும். அதுபோல் புலிகளன் விமானங்களை தரையில் வைத்துதான் அழிக்க முடியும். வானில் பறக்கும்போது அவற்றை அழிக்கும் திறமை இலங்கையிடம் இல்லை.
கேபிர், மிக் ரக விமானங்கள் விடுதலைப்புலிகளின் விமானங்களை இடைமறிக்கும் ஆற்றலுடையவை. அதேசமயம் தாக்கி அழிக்க முடியாது.
புலிகளின் விமானங்களை நிற்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு குண்டு வீசவேண்டும். ஆனால் அவர்கள் பாதாள சுரங்கத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள ரகசிய இடத்தில் தங்கள் விமானங்களை நிறுத்தியுள்ளனர்.
எனவே பதுங்கு குழிகளை துளைக்கும் குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.