ராமர் பாலம்- நாடாளுமன்றத்தில் பாஜக-திமுகமோதல்: பாஜகவுக்கு செக் வைத்த பாலு!!
டெல்லி:ராமர் பாலத்தை சிதைத்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக திமுக-பாஜக எம்பிக்களிடையே இன்று நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபா ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டன.
ஆதம் பாலத்தை (ராமர் பாலம்) குடைந்து சேது சமுத்திரப் பணிகள் நடப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ராமர் காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் அது என பாஜக கூறுகிறது. இதை திமுக ஏற்க மறுத்து வருகிறது.
இந் நிலையில் இன்று லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்தும், பாஜக எம்பி மல்ஹோத்ரா இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார்.
அப்போது இடைமறித்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அைமச்சர் டி.ஆர்.பாலு, இந்த விவகாரம் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால் இதை இங்கு விவாதிக்க முடியாது என்றார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அவையில் மையப் பகுதியில் குவிந்தனர். பதிலுக்கு திமுக எம்பிக்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு கோஷம் போட்டபடி மையப் பகுதிக்கு வந்தனர்.
அப்போது பேசிய மல்ஹோத்ரா, நான் நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரத்தைப் பேசவில்லை என்றார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர், நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை எழுதிக் கொடுங்கள். அதை அனுமதிப்பதா இல்லையா என்று நான் முடிவு செய்கிறேன் என்றார்.
ஆனாலும் பாஜக எம்பிக்கள் தொடர்ந்து கோஷம் போட்டதாலும் பதிலுக்கு திமுகவினரும் கோஷமிட்டதாலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.
அதே போல ராஜ்ய சபாவிலும் இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. இங்கும் பாஜக எம்பிக்கள் இந்த பிரச்சனையைக் கிளப்பினர். குறிப்பாக முரளி மனோகர் ஜோஷி மிகக் கடுமையாக குரல் கொடுத்தார்.
அவர்கள் பேசுகையில், இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வர வானர சேனையின் உதவியோடு இந்த பாலத்தை ராமர் கட்டினார். அதை ஏன் உடைத்து சேது சமுத்திரத்தை அமைக்க வேண்டும் என்றனர்.
பாஜகவுக்கு செக் வைத்த பாலு:
அப்போது பேசிய டி.ஆர்.பாலு, ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் முடிவு எடுக்கப்பட்டது கடந்த பாஜக ஆட்சியில் தான். அப்போது பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசரும், வேத் பிரகாஷ் கோயலும் தான் கப்பல் போக்குவரத்துத்துறை அைமச்சர்களாக இருந்தனர்.
ஆதம் பாலம் பகுதியை (ராமர் பாலம்) பொறுத்தவரை அங்கு மனிதனால் கட்டப்பட்ட பாலம் ஏதும் இருப்பதாக அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.
ஆனால் பாலு சொல்வதைக் கேட்காமல் பாஜகவினர் தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications