ராமர் பாலம்-ஜனாதிபதிக்கு ஜெ கோரிக்கைதர்மாச்சாரியார்கள் கூட்டத்தை கூட்டும் விஎச்பி
சென்னை:ராமர் பாலம் இடிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ராமர் பாலம் 17,50,000 ஆண்டுகள் பழமையானது. இந்தப் பாலம் உள்ளது என்று இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. மிகப் பழமையான இந்த ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டியது நாம் கடமை.
ஆனால் சுயநலப் பேராசையில், ராமர் பாலத்தை திமுக அரசு இடிக்க முற்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, பாஜக மற்றும் பல அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ராமர் பாலம் இல்லையென்று மத்திய அமைச்சர் டிஆர் பாலு மறுக்கிறார். ராமர் பாலம் இல்லை என்று தான் சென்னதை உண்மையாக்க, ராமர் பாலம் குறித்து அரிய வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து வைத்துள்ள சரஸ்வதி மகால் நூலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று அங்கு ராமர் பாலம் குறித்து வரலாற்று தகவல்களை அழிக்கும் முயற்சியல் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் நூலக அதிகாரிகளையும் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மத்திய அமைச்சராக உள்ளவர் இதுகுறித்து தகவல் வேண்டும் என்று கேட்டால் நூலக அதிகாரிகள் எல்லா விவரங்களையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் காவல்துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் டிஆர். பாலு நூலகத்தில் நான்கு மணி நேரம் ஆலோசனை செய்திருப்பதை பார்த்தால், அவர் விவரங்களை சேகரிக்க சென்றதாக தெரியவில்லை. இருக்கிற ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக தெரிகிறது.
இடிக்கப்பட்ட ராமர் பாலத்தின் கற்கள் அக்வேரியஸ் என்ற கப்பல் மூலம் ரகசியமாக எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவரும், பிரதமரும் உடனடியாக இதில் தலையிட்டு ராமர் பாலத்தை மேலும் இடக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சேது சமுத்திர திட்டப் பணி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடலை ஆழப்படுத்தும்ேபாது அவ்வப்போது சில மாதிரி கற்கள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம் என்றும், ராமர் பால கற்கள் மட்டுமல்ல, இதற்கு முன் அகழ்வு நடந்த கடல் பகுதியில் இருந்து கற்கள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் விஷேசம் ஏதுமில்லை என்றனர்.
நாடு தழுவிய போராட்டம்-விஎச்பி
இதற்கிடையில் ராமர் பாலம் இடிக்கப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கையில் ராமர் பாலத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களை தவறாக வழி நடத்தி வருகிறார்.
இதுகுறித்து பல்வோறு இந்து அமைப்புகள் இத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு மனு செய்துள்ளனர். இதுகுறித்து நானும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இதுகுறித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 27ம் தேதி டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் தர்மாச்சாரியார்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதற்குமுன் இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications