கூட்டணி ஆட்சி ஒத்துவராது: கருத்துக் கணிப்பு
சென்னை:தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என தினகரன், ஏசி நீல்சன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் கூட்டணி கட்சிக்கு மக்களிடையே முன்பை விட ஆதரவு அதிகரித்துள்ளும் தெரிய வந்துள்ளது.
தினகரன் நாளிதழும், ஏசி நீல்சன் அமைப்பும் இணைந்து தொடர் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்திற்குக் கூட்டணி ஆட்சி நல்லதா என்பது குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 63 சதவீதம் பேர் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் கூட்டணி ஆட்சியே சிறந்தது என்று கூறியுள்ளனர். 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்னை நகர மக்களிடையே கூட்டணி ஆட்சிக்கு சற்றே ஆதரவு அதிகரித்துள்ளது. அதாவது 38 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 62 சதவீதம் பேர் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று கூறியுள்ளனர்.
கோவை, நெல்லை மாவட்ட மக்கள் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். கோவையில் 77 சதவீதம் பேரும், நெல்லையில், 71 சதவீதம் பேரும் தனிக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், புதுச்சேரி, நாகர்கோவிலில் கூட்டணி ஆட்சிக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. தலா 41 சதவீதம் பேர் கூட்டணி ஆட்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
சென்னையில் 38 சதவீதம் பேரும், மதுரையில் 34 சதவீதம் பேரும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவையில்தான் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அதிகம் இல்லை.
தனிக் கட்சி ஆட்சிக்கான ஆதரவு தெரிவித்தவர்கள் அதுகுறித்துக் கூறுகையில், சுதந்திரமாக செயல்பட, நிர்ப்பந்தம் இல்லாமல் செயல்பட தனிக் கட்சி ஆட்சிதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூறுகையில், கூட்டணி ஆட்சி என்றால் எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் மற்ற கட்சியினர் தட்டிக் கேட்கலாம், கண்டிக்கலாம், இதன் மூலம் தவறுகளைக் குறைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.