நெல்லை, குமரி கல்வி நிறுவனங்களில்ரெய்டு: பல கோடி வரி ஏய்ப்பு!
திருநெல்வேலி:நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான கல்லூரிகள் உள்பட 19 இடங்களில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் பல கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பல லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர் சுரேஷ் கப்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இரு அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பெருமளவு வரி முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அந்தக் கல்லூரிகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 19 இடங்களில் சோதனை நடந்தது. இதில் 150 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மே 4ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு இந்த சோதனை முடிவடைந்தது.
முதல் சோதனை நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்ட படநிலம் நல அறக்கட்டளைக்குச் சொந்தமான, குலசேகரத்தில் இயங்கி வரும் மூகாம்பிகை மருத்துவ அறிவியல் கழகம், பல் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் நடந்தது.
இந்த சோதனையில், கடந்த 6 ஆண்டுகளாக ரூ. 20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் ரூ. 26 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
சோதனையின்போது ரூ. 13.5 லட்சம் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த அறக்கட்டளையை டாக்டர் வேலாயுதன் நாயர் என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் சாதாரண ஒரு கிளினிக்கை மட்டும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல இன்னொரு கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பிடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்தக் கல்லூரியின் தாளாளர் சுயம்புவின் நாகர்கோவில் இல்லத்திலும் சோதனை நடந்தது.
இந்த அறக்கட்டளைக்கு நிதியாக வந்த பணத்திற்கு முறையான ரசீதுகள் இல்லை. கணக்குகளும் சரிவர பராமரிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் நடத்தி வரும் ஜவுளிக் கடையில் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள துணிகளுக்கு கணக்கு இல்லை என்று கப்ரா தெரிவித்துள்ளார்.