அண்ணா சிலைக்கு அவமதிப்பு-முதியவர் கைது
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்ணா சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மூடை தூக்கும் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
பெரியார், பிள்ளையார் உள்ளிட்டவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவை நிறுவியவருமான அண்ணாவின் சிலையையும் விஷமிகள் அவமதிக்கத் தொடங்கியுள்ளனர்.
குமாரபாளையம் சுற்றுலா மாளிகை முன்பு அண்ணா சிலை உள்ளது. கடந்த 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலைக்கு நேற்று நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ராஜு என்ற 60 வயது முதியவர்தான் இந்த செயலைச் செய்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்தனர்.
அண்ணா மீது கொண்ட பற்றால்தான் இவ்வாறு செய்ததாகவும், அவமதிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்யவில்லை என்றும் அந்த முதியவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ராஜூ ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications