மந்திரி பதவி கிடைச்சா சந்தோஷம்-காங்.
சென்னை:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்கப்பட்டால் சந்தோஷம் அடைவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தார் கிருஷ்ணசாமி. தமிழக காங்கிரஸ் கட்சியில் பெருகி வரும் கோஷ்டி மோதலுக்கு மத்தியில் கிருஷ்ணசாமி டெல்லி சென்றதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை திரும்பிய கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் டெல்லிக்குச் சென்றிருந்ததில் விசேஷம் ஏதும் இல்லை. வீரப்ப மொய்லியைச் சந்தித்தேன். கட்சி நிர்வாகிகள் நியமனம் குறித்து அவருடன் விவாதித்தேன்.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் விரைவில் சரியாகி விடும். எங்கள் கட்சியில் சில நேரங்களில் இப்படித்தான் இருக்கும். பிறகு நாங்கள் ஒன்றாகி விடுவோம். இப்போதைய கோஷ்டிப் பூசலும் அதுபோலவே சீக்கிரம் சரியாகி விடும்.
அமைச்சர் பதவி வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு. அதை கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.