மத வெறி சிடி: பாஜக மன்னிப்பு கேட்க தேர்தல் ஆணையம் கெடு!
டெல்லி: மதவெறியை தூண்டும் வகையில் பிரசார சிடியை வெளியிட்டதற்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவுக்கு தேர்தல் கமிஷன் கெடு கொடுத்துள்ளது.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பிரசார சிடி வெளியிடப்பட்டது. இந்த சிடியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்து போல் சென்று பசுமாட்டை விலைக்கு வாங்கி அதை இறைச்சி கடைக்கு அனுப்பி வைப்பது போலவும், இன்னொரு முஸ்லிம் இளைஞர் இந்து போல நடித்து இந்து பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ய முயற்சிப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சிடி உ.பி முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், மத உணர்வை தூண்டும் பாஜகவை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டினை பாஜக மறுத்தது. தலைமைக்குத் தெரியாமல் தங்கள் கட்சியினர் இதுபோன்ற சிடியை தயாரித்து வெளியிட்டு விட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது.
இது தொடர்பான தேர்தல் கமிஷன் விசாரணையில் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா இடம் பெறக்கூடாது என்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சிடி வெளியிட்ட பிரச்சனையில் பாஜக இன்னும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கெடு விதித்துள்ளது.