அழகிரி ரெளடி-சன் டிவி கடும் தாக்கு:அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி
சென்னை:மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை சன் டிவி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆனால் இதே அழகிரியின் ஆதரவாளர்கள் முன்பு ஒருமுறை மதுரையில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டபோது அதை சன் டிவி சுத்தமாக காட்டாமல் மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
அழகிரி, ஸ்டாலின் மோதல் திமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் நன்கறிவர். இருவரது ஆதரவாளர்களும் அவ்வப்போது மோதிக் கொள்வர், மிகக் கடுமையான வாக்குவாதங்களும் நடக்கும். பலமுறை மதுரையில் பெரும் அடிதடியும் நடந்துள்ளது.
அந்த சமயங்களில் எல்லாம் சன் டிவியில் இதுகுறித்து பெரிதாக செய்திகள் எதுவும் இடம் பெற்றதில்லை.
இந் நிலையில் சன் டிவி அலுவலகத்தை அழகிரி ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கி சன் டிவி நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
இது சன் டிவியின் இன்றைய பிற்பகல் செய்தியில் எதிரொலித்தது. வழக்கமாக 1.30 மணிக்கு ஒளிபரப்பாக வேண்டிய செய்தி, பத்து நிமிடங்கள் தாமதமாகத்தான் ஒளிபரப்பானது.
முதல் செய்தியே அழகிரி செய்திதான். இதுவரை இல்லாத அளவுக்கு அழகிரி குறித்து செய்தியில் கடுமையாக குறிப்பிட்டனர்.
அழகிரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி மதுரை மக்கள் தவிப்பதாகவும், மதுரை நகரம் ஸ்தம்பித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டது.
அதைவிட மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனை, அழகிரியின் ரவுடி என்று கடுமையாக குறிப்பிட்டனர். முதல்வரின் மூத்த மகன் அழகிரியை, முதல் முறையாக சன் டிவி மிகக் கடுமையாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் மிகப் பெரும் வன்முறையில் குதித்தனர். அப்போது நூற்றுக்கணக்கான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மக்கள் பீதியடைந்து பயப்படும் நிலை காணப்பட்டது.
ஆனால் அதுகுறித்து சன் டிவியில் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
ஆனால் இப்போது சன் டிவி, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தியை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது சன்.