பணத்தால் எதையும் சாதிக்க நினைக்கிறதுசன் டிவி-மு.க. அழகிரி காட்டம்
மதுரை:தங்களிடம் கொட்டிக் கிடக்கும் பணத்தை வைத்து எதையும் சாதித்து விடலாம் என நினைக்கிறது சன்டிவி, தினகரன் நிர்வாகம் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தினகரன் நாளிதழில் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு அழகிரி ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக நேற்று மதுரையே ரணகளமாகி 3 தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் கலவரம் நடப்பதற்கு முன்பு அழகிரி அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான கருத்துக் கணிப்பு இது, கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்த இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டுள்ளது என்று காட்டமாக கூறினார்.
அவர் அளித்த பேட்டியில், இந்த கருத்துக் கணிப்பில் பெரிய உள்நோக்கம் உள்ளது. நான் எப்போதுமே பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. கட்சியில் கூட எனக்கு எந்தப் பதவியும் கிடையாது. அப்படிப்பட்ட நான் பதவிக்கு எப்படி வர முடியும். எனது தம்பி மு.க.ஸ்டாலினின் இருக்கைக்கு வர நான் எப்படி ஆசைப்பட முடியும்.
முதல்வரின் சட்டசபை பொன்விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளதை விஷமத்தனமான, உள்நோக்கத்துடன் கூடிய ஒன்றாகவே கருதுகிறேன். முதல்வர் மனதை நோகடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்துக் கணிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நான் தினகரன் பேப்பரையே படிப்பதில்லை. இதுபோன்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டவர்கள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு பொய்யான கருத்துக் கணிப்பு.
கருத்துக் கணிப்பு வெளியானதும் ஸ்டாலின் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நடந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கருத்துக் கணிப்பையும் அவர் கண்டித்தார்.
இப்போது தேர்தல் காலமும் கிடையாது. இந்த நிலையில் இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. அவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. அதை வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications