காவிரி தண்ணீர் இனி விவசாயத்திற்கு கிடையாது.. கர்நாடகா அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவிப்பு
பெங்களூர்: ''போதிய மழையில்லாததால் கேஆர்எஸ் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் இனி விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியாது. மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கர்நாடகம், தமிழகம் 2 மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும். அதனால் தமிழக அரசு தனது பிடிவாத போக்கை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உறுதியாக கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காவிரிக்கு குறுக்காக மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் அம்மாநில அரசு உறுதியாக உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் காவிரியில் திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே தான் அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி மண்டியா கேஆர்எஸ் அணை (இந்த அணையில் இருந்து தான் தமிழகத்துக்கு அதிகப்படியான தண்ணீர் காவிரியில் வரும்) பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு மழை பெய்கிறது.. இதனால் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் மழை பற்றாக்குறையால் அணைகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனை குடிநீருக்காக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் தற்போது உள்ள நீர் குடிநீர் பயன்பாடு, கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்க போதுமானதாக இருக்கும்.
விவசாய பணிகளுக்கு தற்போதைக்கு நீர் வழங்க இயலாது. அடுத்த 15 நாட்களுக்கு நல்ல மழை பெய்து இதேபோல் நீர்வரத்து இருந்தால் விவசாயத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும். எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். நான் உண்மை நிலையை விவரித்துள்ளேன்.
தற்போது உள்ள நீரை திறந்து விட்டால் வரும் நாட்களில் குடிநீர் தேவைக்கு சிக்கல் ஏற்படும். இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற 15-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
அங்கு என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த 15 நாட்களுக்கு நல்ல மழை பெய்தால் நமக்கு அதிகளவில் நீர் கிடைக்கும். அப்போது எந்த பிரச்சினையும் இருக்காது.
இந்த ஆண்டு இயல்பை விட நமக்கு மழை குறைவாக கிடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதனால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறி மக்கள் பிரதிநிதிகள் மீது அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது. மேகதாது திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எந்த காரணத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கர்நாடகம், தமிழகம் 2 மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும். அதனால் தமிழக அரசு தனது பிடிவாத போக்கை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications