"அமைச்சர் ஸ்ரீநாத் வரார்".. கனிமொழியை தடுத்து ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்த போலீசார்.. பரபரப்பு
தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்த தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி காரில் சென்றார். ஆனால் கனிமொழியின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை செலுத்திய பிறகு தான் அனுமதிப்போம் என்று கூறினர். இதையடுத்து கனிமொழி எம்பி காரை விட்டு இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மரியாதை செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது அவரது 316வது பிறந்தநாளாகும். இன்று அழகு முத்துகோனின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரது வீரத்தை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர். முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல தலைவர்களும் மாவீரன் அழகு முத்துகோனை நினைவு கூர்ந்துள்ளனர்.
மாவீரன் அழகுமுத்துகோன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தை சேர்ந்தவர். அங்கு அவருக்கு நினைவிடம் உள்ளது. இந்நிலையில் தான் நினைவிடம் சென்று நேரில் மரியாதை செலுத்தி தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி சென்றார். அப்போது அங்கு தூத்துக்குடி தவெக எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் மரியாதை செலுத்த வருவதாக இருந்தது.
ஆனால் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்த நேரத்தில் வரவில்லை. காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கனிமொழி எம்பி மரியாதை செலுத்த சென்றார். ஆனால் போலீசார் கனிமொழி எம்பியை தடுத்து நிறுத்தினர். அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் செல்ல வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் கூறி தடுத்து நிறுத்தினர்.
இதனால் கனிமொழி எம்பியுடன் வந்த திமுகவினர் கடும் கோபமடைந்தனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கனிமொழி எம்பி தனது காரில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவீரன் அழகு முத்துகோன் மணிமண்டபத்தை அடைந்தார். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications