அய்யோ.. உலக அளவில் ஆபத்தில் மதுரை! ஆக்ஸ்போர்ட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்! அப்போ நம்ம சென்னை?
சென்னை: காலநிலை மாற்றம் உலகம் முழுவதும்பெரிய பிரச்சினையாக மாறிவரும் நிலையில் வெப்ப அலைகளால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. உலகின் 205 பெரிய நகரங்களை ஆய்வு செய்து அந்த பல்கலைக்கழகம் அறிக்கையை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் மதுரை உலக அளவில் ஏழாவது இடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை உலக அளவில் 49 வது இடத்தை பெற்றிருக்கிறது.
என் நினோ பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் வெப்ப அலைக்கு இலக்காகி வருகின்றன. ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெப்ப அலை ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி உள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் ஆபத்து மிகுந்த நகரங்களில் பட்டியலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 205 நகரங்கள் இந்த பட்டியலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
Sustainable Cities and Society என்ற சர்வதேச அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. வழக்கமாக வெப்பநிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நகரங்களின் வெப்ப அலை ஆபத்து கணக்கிடப்படும். ஆனால் இந்த ஆய்வில் அதையும் தாண்டி நகரங்களின் மக்களின் அடர்த்தி, சமூக பாதிப்பு, சுகாதார வசதிகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு, வெப்பத்தை சமாளிக்கும் திறன், காற்றோட்டம், ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த பட்டியலில் ஈராக் நாட்டின் அல்பஸ்ரா நகரம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் அகமதாபாத் இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து மாலியின் பமாகோ, இந்தியாவின் நாக்பூர், பிலிப்பைன்ஸின் குய்சான் சிட்டி, ஈராகின் பாக்தாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிர்ச்சி தரும் விதமாக தமிழகத்தின் மதுரை உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் 3வது இடத்தை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொருத்தவரை இந்த பட்டியலில் அகமதாபாத், நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை ஆகிய நகரங்கள் அடங்கியுள்ளன. இதில் தமிழகத்தின் தலைநகரான சென்னையும் இடம் பெற்று இருக்கிறது. இதன் மூலம் உலகின் அதிக வெப்ப அலை ஆபத்து கொண்ட முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 15 நகரங்கள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நகரத்தின் வெப்பநிலை அதிகமாக இருப்பது மட்டுமே அந்த நகரம் ஆபத்தில் சிக்கி உள்ளது என அர்த்தம் இல்லை. வெப்பத்தை சமாளிக்க மருத்துவ வசதிகள், குடிநீர், காற்றோட்டம், குளிர்ச்சி தரும் உட்கட்டமைப்பு, மக்களின் பொருளாதார நிலை உள்ளிட்டு அம்சங்களும் பங்கு வைக்கின்றன. சில நகரங்களில் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் காரணமாக பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
அதே நேரத்தில் வெப்பநிலை ஒப்பிட்டு அளவில் குறைவாக இருந்தாலும், மருத்துவ வசதிகள், அதிக மக்கள் அடர்த்தி, திட்டமிடாத நகர அமைப்பு போன்ற காரணங்களால் சில நகரங்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சி, ஃபைசலா பாத் மற்றும் நைஜீரியாவின் கடுனா போன்ற நகரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அதிர்ச்சி தரும் விதமாக தமிழகத்தின் மதுரை இந்த பட்டியலில் உலக அளவில் ஏழாவது இடத்தில் இடம் பெற்றிருப்பது தமிழகத்தின் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொள்ள செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலத்தில் மதுரையில் 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. வேகமான நகரமயமாக்கல், மரங்களின் எண்ணிக்கை குறைதல், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பது போன்றவை மதுரையை ஆபத்தான நகரங்களின் பட்டியலில் உலக அளவில் ஏழாவது இடத்தை பிடிக்க செய்துள்ளது.
இந்த ஆய்வில் இன்னொரு முக்கியமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை சமாளிக்க ஏர் கண்டிஷனர்களை மட்டும் நம்புவது தீர்வாக இருக்காது எனவும், அதிக அளவிலான ஏசி பயன்பாடு மின்சார நுகர்வை உயர்த்துவதோடு பசுமை குடில் வாயு வெளியேற்றத்தையும் அதிகரிக்கிறது. இது மேலும் நகர் வெப்பமயமாதலை தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். அதற்கு பதிலாக நகரங்களில் அதிக மரக்கன்றுகள் நடுதல், பசுமை பகுதிகளை விரிவுபடுத்துதல், வெப்பத்தை பிரதிபலிக்கும் கட்டிட வடிவமைப்புகளை கொண்டு வருதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications