Vietnam Boat Tragedy: வியட்நாம் படகு விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி என தகவல்!
ஹோனோய்: வியட்நாம் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 15 பேரில் 8 பேர் தமிழர்கள் என சொல்லப்படுகிறது. மேலும் சில தமிழர்கள் படகில் இருந்ததாகவும் தெரிகிறது.
வியட்நாமில் மிகவும் புகழ்பெற்ற தீவு ஃபூ குவோக் ஆகும். இங்கிருந்து சனிக்கிழமையான இன்று ஆன் தோய் துறைமுகத்திற்கு இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு விசைப்படகு ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த படகில் 32 இந்திய பயணிகள், 4 மாலுமிகள் என மொத்தம் 36 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. புறப்பட்டு 400 மீட்டர் தூரத்தில் திடீரென அந்த படகு பழுதடைந்து நின்றுவிட்டதாம். அப்போது அங்கு பலத்த காற்று வீசியதை அடுத்து அந்த படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் பயணித்தவர்கள் தண்ணீரிலும், பலர் படகிற்குள்ளேயும் சிக்கிக் கொண்டனர். இந்த படகு விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படை, கடற்படை உள்ளிட்ட குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 15 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களில் 8 பேர் தமிழர்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன.
கரைக்கு கொண்டு வரப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பழனியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தவராம். கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றாராம். அது போல் திருச்சியை சேர்ந்த ஷேக், அழகுராஜ் ஆகியோரும் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியட்நாம் படகு விபத்தில் 8 பேர் பலியானதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:வியட்நாம் நாட்டின் ஹான் மே ரூட் ங்வோய் ( Hon May Rut Ngoai) தீவில் இன்று மாலை நிகழ்ந்த மோசமான படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் Hon May Rut Ngoai தீவுக்கு அருகில் பயணம் மேற்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 8 பேர் சென்னை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக மீட்டு, சொந்த ஊர்களுக்கு கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் மழை பொழிவு இல்லாத போதிலும், விபத்து நடந்த நேரத்தில் கடலில் மோசமான சூழல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் சுற்றுலா படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஃபூ குவோக் என்ற தீவு, கல்ஃப் ஆஃப் தாய்லாந்தில் உள்ளது. இது மிகவும் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த தீவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ஹோன் மே ருட் எனும் பகுதியாகும்.
இந்த இரு இடங்களுக்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் வந்து செல்கிறார்கள். இங்கு வெள்ளை நிற மணல் கொண்ட பச்சை நிறத்தினாலான சுத்தமான தண்ணீர் இருப்பதால் இங்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications