பலியான 3 ஊழியர்கள் குடும்பங்களுக்குசன் டிவி ரூ.15 லட்சம் இழப்பீடு
மதுரை:அழகிரி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட 3 ஊழியர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் கூறியுள்ளார். சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் சன் டிவி, தினகரன் அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய வெறியாட்டத்தில் பத்திரிக்கை அலுவலக கம்ப்யூட்டர் பிரிவு சர்வீஸ் பொறியாளர்கள் வினோத், கோபி மற்றும் வாட்ச்மேன் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்தத் தகவல் அறிந்ததும் கலாநிதி மாறன் மதுரைக்கு விரைந்து வந்தார். நேராக பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார். மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த கோபி, வினோத் ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தினகரன் அலுவலகத்திற்கு அவர் வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கலாநிதி மாறனை கண்ணீர் மல்க சூழ்ந்து கொண்டு நடந்த வெறியாட்டத்தை விவரித்தனர். அவர்களின் கூறியதை மிகவும் உன்னிப்பாக கவனித்தார் கலாநிதி மாறன்.
பின்னர் அவர்களிடம் கலாநிதி மாறன் பேசுகையில், அழகிரி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும். இந்த சம்பவத்திற்கும், வெறியாட்டத்திற்கும் காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை சன் டிவி நிர்வாகம் போராடப் போவதாகவும் தெரிவித்தார் கலாநிதி மாறன்.