வைகோ செய்த பெரும் தவறு என்ன?
திருசெந்தூர்:மதிமுக தொடங்கப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் நான் செய்த பெரிய தவறு என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுகவின் 14வது ஆண்டு தொடக்கவிழா மாநாடு திருச்செந்தூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,
ஆயிரக்கணக்கான புலவர்களால் பாடப் பெற்ற திருசெந்தூரில் மதிமுக மாநாடு நடப்பது பொருத்தமாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக நம்மை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு ஒரு பாடமாக அமையும்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது எம்ஜிஆரையும், என்னை திமுகவை விட்டு தூக்கி எறிந்ததற்கான காரணங்களை கூறினார். ஆனால் எம்ஜிஆரோடு என்னை ஒப்பிட முடியாது.
கடந்த 13 ஆண்டுகளில் 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி வைத்துதான் நான் செய்த பெரிய தவறு. கூட்டணியில் இருக்கும்போதே அழிக்க நினைத்தனர்.
ஆனால் அதிமுக பொதுசெயலாளர் சகோதரி ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 35 இடங்கள் கொடுத்து வெற்றி பெற வாழ்த்தினார். தஞ்சையில் நடந்த மதிமுக தொடக்கவிழா மாநாட்டிற்கு ஜெயலலிதா வாழ்த்து கூறினார். எங்களது வளர்ச்சிக்கு அதிமுக உற்ற தோழனாக இருந்து வருகிறது.
கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டன் தான் முதுகெலும்பு, அப்படிபட்ட தொண்டனை கொண்ட இயக்கமாக மதிமுக விளங்குகிறது.
விரைவில் மத்தியில் ஆட்சி மாறும், மாநிலத்தில் தேர்தல் வரும்.
மதுரை கலவரம் குறித்து அவர் பேசுகையில் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க குண்டர் கூட்டம் தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையை தன் வசம் வைத்துள்ள்ள முதல்வர் கருணாநிதி இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
விஷமத்தனமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு கலவரத்திற்குத் தூண்டுகோலாக இருந்த தினகரன் நாளிதழ் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி உடனடியாக விலக வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications