ஆதிக்க சக்திகளின் அடித்தளத்தைஅசைத்தவர் கருணாநிதி-சோனியா
சென்னை:ஆதிக்க சக்திகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பதில் தனது இளமைக் காலத்தை செலவழித்த கருணாநிதி பிரமிக்க்கத்தக ஒரு மாமனிதர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
தீவுத் திடலில் நடந்த பாராட்டு விழாவில் சோனியா காந்தி பேசுகையில், சகோதர, சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
கலைஞர் கருணாநிதி சட்டசபையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது புகழ் மிக்க ஒரு நிகழ்வு. இந்திய வரலாற்றில் இது அரிதான ஒன்று. 1957ம் ஆண்டிலிருந்து தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் கருணாநிதி வென்றுள்ளார். இது மிகப் பெரிய சரித்திர சாதனை.
தமிழகம் பல போராட்டங்களை சந்தித்தபோது, பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாகவும், வீழவும் இருந்த காலகட்டத்திலே, பல்வேறு தலைமைகள் உருவாகி வீழ்ந்த காலத்திலே கலைஞர் மட்டும் 50 ஆண்டுகள் சரியாத மனிதராக இருந்து வெற்றிகள் பெற்று இருக்கிறார் என்றால் அதை பாராட்டாமல் இருக்க முடியாது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்று தமிழகத்தில் போட்டியிட்ட 39 இடங்களிலும், புதுவையில் ஒரு இடத்திலும் மொத்தமாக 40 தொகுதிகளிலும் வென்று கொடுத்தார் கருணாநிதி. அவரது அயராத உழைப்பு, தேர்தல் பிரசாரம், கூர்மையான எழுத்து ஆகியவற்றை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று தமிழகம் வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி, கம்ப்யூட்டர் வன்பொருள், தோல் தொழில், ஜவுளி, விவசாயம் என பல துறைகளில் தமிழகம் முன்னால் நிற்கிறது என்றால் அதன் பின்னால், கலைஞரின் உழைப்பும், தியாகமும் நிற்கிறது.
அவருடைய தாக்கம் 3 தலைமுறைகளாய் தமிழகத்தில் இருக்கிறது. அவரைப் பாராட்டுவதற்காகவே டெல்லியிலிருந்து ஓடோடி வந்துள்ளேன்.
அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நிலையையும் ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.