காவிரியில் கர்நாடக புதிய அணை கட்டவில்லை- துரைமுருகன்
சென்னை:ஒகேனக்கல் அருகே காவிரியில் புதிய அணை எதுவும் கர்நாடக அரசு கட்டவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் துறைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி, பாலாறு குறித்து சட்டப்சபையில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் துறைமுருகன் பேசியதாவது,
ஒகேனக்ல் பகுதியில் கர்நாடக அரசு அணை எதுவும் கட்டவில்லை. கொள்ளேகாலில் இருந்து பெங்களுரூ செல்லும் வழியில் கல் பாலம் உள்ளது. அதன் அருகில் பவர் ஹவுஸ் கட்டுகின்றனர். அங்கு பயன்படுத்தும் தண்ணீரை கீழே கொண்டு வர வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. அது அணை அல்ல.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம் மேல் முறையீடு செய்துள்ளது. அதில் காவிரியில் இனி புதிய அணை கட்டினால் தமிழகத்தை கேட்க வேண்டும் என முறையீட்டையும் சேர்த்துள்ளோம்.
மேலும் பாலற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை வாங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமானால் அதற்குரிய பணத்தை தர வேண்டும் என கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கடிதம் எழுதியுள்ளார். பாசனத்திற்கு தரும் தண்ணீருக்கு பணம் கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது என அவர் கூறினார்.