தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்குஅதிமுக வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
மதுரை:மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே இங்கு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, வீரராகவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் சார்பில் அதிமுக எம்.பி. ஜோதி, வழக்கறிஞராக ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அதை விசாரணைக்கு ஏற்றனர். பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, மதுரை, நெல்லை சரக டிஐஜிக்கள், 9 மாவட்ட எஸ்.பிக்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications