மதுரை: ஆபரேசன் செய்யப்பட்ட சிறுவன் மரணம்-டாக்டரை முற்றுகையிட்ட பெற்றோர்
மதுரை:மதுரை தனியார் மருத்துமனையில் ஆபரேசன் செய்யப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனுக்கு ஆபரேசன் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேல சின்னாளம்பட்டியை சேர்ந்தவர் ஞானசம்பந்தன். இவரது மகன் ஆகாஷ் (7), 2ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. அப்போது ஞானசம்பந்தன் தனது மகனை அவர்களிடம் காண்பித்தார்.
அப்போது சிறுவனுக்கு தொண்டையில் லேசான சதை வளர்ந்து இருப்பதாக அங்கிருந்த டாக்டர்கள் கூறி அதற்கான மருந்துகளும் கொடுத்தனர். ஆனால் ஞானசம்பந்தன் தனது மகனை மதுரை நரிமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
சிறுவன் ஆகாஷை பரிசோதித்த டாக்டர் சிறுவனுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறினார். இதையடுத்து ஞானசம்பந்தன் ஆபரேஷனுக்கு ஒத்துக்கொண்டார்.
அதன்படி நேற்று இரவு 10.30 மணியளவில் சிறுவன் ஆகாஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டான். சுமார் 2 மணி நேரமாகியும் சிறுவனின் நிலை குறித்து டாக்டர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஞானசம்பந்தன் டாக்டரிடம் ஆகாஷின் நிலை குறித்து கேட்டார்.
அப்போது சிறுவனின் நிலை மோசமாக இருப்பதாக இருப்பதால் அவனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல வேண்டும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஞானசம்பந்தன் டாக்டரிடம் நீங்கள் தான ஆபரேஷன் செய்தீர்கள், நீங்களும் உடன் வாருங்கள் என கூறி டாக்டர் காரிலேயே மேலூரில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இங்கு பார்க்க முடியாது. மதுரை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர். இதையடுத்து சிறுவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷின் பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரம் அடைந்து உடன் சென்ற டாக்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் காணப்பட்டது.
இதை அறிந்த போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிறுவனின் பெற்றோரிடமும், உறவினரிடமும் சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் சமரசம் ஆகாமல் டாக்டரை வெளியே விடாமல் விடிய விடிய அங்கேயே சிறை வைத்தனர்.
இதையடுத்து இன்று காலை தல்லாகுளம் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுவனின் பெற்றோரையும், உறவினர்களையும் சமரசம் செய்து டாக்டரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.