கமுதி: அனுமதியின்றி தேவர் சிலை வைப்பு-அகற்ற போலீஸ் முயற்சி- பெரும் பதற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அனுமதி பெறாமல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை போலீஸார் அகற்ற முயன்றதால் சிலை வைத்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமுதி அருகே உள்ள கழுத்தறுவான் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அவர்கள் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.
அனுமதி வாங்காமலேயே கிராமத்தினர் சிலை வைக்கும் பீடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க ஏற்பாடு செய்த பார்வார்டு பிளாக் வல்லரசு (போட்டி அணி) மாநில பொதுச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ராஜபாண்டியனையும், கிராம மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகள் முடிவினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ராஜபாண்டியன் உள்பட 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கழுத்தறுவான் கிராமத்தினர் நேற்று முன் தினம் இரவோடு இரவாக தேவர் சிலையை அங்கு நிறுவி விட்டனர். இதையறிந்த கமுதி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். அனுமிதியின்றி சிலை வைத்ததாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் தேவர் சிலையையும் அவர்கள் அகற்ற முயன்றனர். இதற்கு அப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடனும், அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் இறக்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந் நிலையில் கழுத்தறுவான் கிரமாத்தையடுத்துள்ள இடிவிலிகி, எருமைகுளம் ஆகிய கிராமங்களிலும் தேவர் சிலையை வைக்க அப் பகுதியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவுவதால் ஆயுதம் ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications