விஜயகாந்த் மண்டபம் இடிப்பு பணி ஆரம்பம்-மிச்ச இடத்தில் புதிய கட்சி அலுவலகம்
சென்னைதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. மிச்ச சொச்சமாக கிடைக்கும் 3 கிரவுண்டு நிலத்தில் புதிய கட்சி அலுவலகத்தைக் கட்ட விஜயகாந்த் தீர்மானித்துள்ளார்.
விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் கோயம்பேடு நூறடி சாலையில், 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இருந்தது. இந்த இடத்தை பாலம் கட்டத் தேவைப்படுவதாக கூறிய மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கைப்பற்றினர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டு மண்டபத்தை மீட்க முயன்றும் முடியாமல் போனதால் கல்யாண மண்டபத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டார் விஜயகாந்த்.
இதையடுத்து மண்டபத்தில் இடிபடும் பகுதியை நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறியிட்டனர். நெடுஞ்சாலைத் துறை மேலாளர் ராவ், நில ஆர்ஜித தாசில்தார் சிதம்பரம் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.
மொத்தம் உள்ள 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் வரை மட்டுமே இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதம் உள்ள 3 கிரவுண்ட் நிலம் விஜயகாந்த்துக்கேக் கிடைக்கும்.
நேற்று இடிப்புப் பணி ஆரம்பமாகியது. இதையடுத்து தேமுதிகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திரளாக கூடியிருந்து கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
பின்னர் சுதீஷ் கூறுகையில், மிச்சம் கிடைக்கும் இடத்தில் தேமுதிகவுக்கு அலுவலகம் கட்டப்படும். விரைவில் இதே இடத்தில் கட்சியின் தலைமைக் கழக அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்றார்.