உசிலம்பட்டி: குழந்தையைக் கொன்று வீட்டின்முன் புதைத்த தந்தை, பாட்டி கைது
மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை பிறந்த உடனேயே கள்ளிப் பால் கொடுத்து கொன்று, உடலை வீட்டுக்கு முன்பாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாத குழந்தையின் தந்தை மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
பெண் சிசுக் கொலைக்கு பெயர் போனது உசிலம்பட்டி. இந்த அவப் பெயர் சமீப காலமாக மாறி வந்தது. அரசின் தீவிர நடவடிக்கை, தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப்புணர்வுப் பிரசாரம், காவல்துறையின் கண்காணிப்பு காரணமாக பெண் சிசுக்களைக் கொலை செய்வது குறையத் தொடங்கியது.
இருப்பினும் ஆங்காங்கே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் பிறந்த உடனேயே பெண் சிசுவைக் கொன்று உடலை வீட்டுக்கு முன்பே புதைத்த கொடூரம் நடந்துள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பூமிகா, மோனிகா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பமான செல்விக்கு 3வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
3வதும் பெண்ணாக பிறந்ததால் அதிருப்தியுற்ற வடிவேல் தனது தாயார் ஒச்சம்மாளுடன் சேர்ந்து குழந்தையைக் கொல்ல முடிவு செய்தார். அதன்படி குழந்தைக்கு கள்ளிப்பாலை கொடுத்து கொலை செய்தனர். பின்னர் தங்களது வீட்டுக்கு முன்பு பள்ளம் தோண்டி அதில் சிசுவைப் போட்டு மூடி விட்டனர்.
தகவல் கிடைக்கப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறுதியில், வடிவேல், ஒச்சம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.