பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் திடீர்ராஜினாமா: அமைச்சரின் நெருக்கடி காரணமா?
திருச்சி:திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கமுத்து திடீரென ராஜினாமா செய்து விட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் நெருக்குதலே இதற்குக் காரணம் என பேச்சு எழுந்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சி.தங்கமுத்து. இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 22 நாட்கள்தான் உள்ளன. இந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் தங்கமுத்து.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தங்கமுத்து கூறியுள்ளார். ஆனால் இதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. புதன்கிழமை திருச்சிக்கு வந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது அலுவலகம் திரும்பிய துணைவேந்தர் தங்கமுத்து மிகவும் அப்செட் ஆகிக் காணப்பட்டாராம். இந்த நிலையில்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.
பின்னர் பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய செல்போனை பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்து விட்டு உடனடியாக சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் தங்கமுத்து.
அமைச்சர் பொன்முடிக்கும், தங்கமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அமைச்சரின் பேச்சால் அதிருப்தி அடைந்தே தனது பதவியை தங்கமுத்து ராஜினாமா செய்து விட்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.