தொழிலதிபருக்கு ஷாக்: மின்வாரிய ஊழியர் கைது
சென்னை:தன்னைப் பற்றி லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர், முதியவரான தொழிலதிபரை மின்சார ஷாக் கொடுத்துக் கொல்ல முயன்று கைதாகியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாதமுனி (75). தொழிலதிபரான இவர் பூங்காநகர் பகுதியில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு பெற தனது வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்து வரும் மின்வாரிய ஊழியர் ராம் மோகனை அணுகினார்.
மின் இணைப்பை விரைவில் பெற்றுத் தருவதாக கூறிய ராம் மோகன் இதற்காக நாதமுனியிடமிருந்து ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி இணைப்பு வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் கோபமடைந்த நாதமுனி, மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராம் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நாதமுனியின் செயலால் ஆத்திரமடைந்த ராம்மோகன் நேற்று நாதமுனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது நாதமுனி மட்டும் தனியாக இருந்தார். அவரை ஒரு சேரில் உட்கார வைத்து கை, காலை கட்டி விட்டு பின்னர் அவரது உடம்பில் மின்சார வயரைப் பொருத்தி ஷாக் கொடுத்துள்ளார்.
கதறித் துடித்த நாதமுனியிடம், என் மீதான புகாரை வாபஸ் வாங்கி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நாதமுனி மயங்கி விடவே, பயந்துபோன ராம் மோகன் அங்கிருந்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நாதமுனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்மோகன் கைது செய்யப்பட்டார்.