மீண்ட 11 மீனவர்களும் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 11 மீனவர்களும் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ததேயூஸ், ஜேசுதாசன், கிங்ஸ்லி, ததேயூஸ், ஆல்பர்ட், கிளமன்ட், தீபக், அனிஸ்டன், ஜேம்ஸ், பிரபு, பிராங்க்ளின், கேரளாவைச் சேர்ந்த சைமன் ஆகிய 12 பேரும் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால் குறித்த நேரத்தில் கரைக்கு அவர்கள் திரும்பவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடலோரக் காவல் படையிடம் சிக்கிய 6 கடல் புலிகளிடம் நடத்திய விசாரணையில் 12 பேரும் விடுதலைப் புலிகள் வசம் இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், 11 தமிழக மீனவர்களும் நேற்று இரு பிரிவாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை கியூ பிரிவு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று காலை 11 பேரும் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
தங்களைக மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கியூ பிரிவு தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீட்கப்பட்ட மீனவரக்ளிடம் பேச பத்திரிக்கையாளர்கள் முயன்றபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். வேக வேகமாக மீனவர்களை அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications