கூரை போட்டு கட்சி ஆபீஸ்: விஜயகாந்த்
சென்னை:கல்யாண மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்து விட்டதால் நான் கவலைப்படவில்லை. மிச்ச இடத்தில் கூரையைப் போட்டு கட்சி அலுவலகத்தை நடத்துவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் முக்கால்வாசிப் பகுதியை அரசு கையகப்படுத்தியுள்ளது. மண்டபத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. பாதி மண்டபத்தை இடித்து விட்டனர். இன்றைக்குள் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து விஜயகாந்த்திடம் கேட்டபோது, கல்யாண மண்டபத்தை பாலம் கட்டுப் பணிக்காக கையகப்படுத்தியுள்ளனர். அதற்காக கவலைப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் போக மீதமுள்ள இடத்தில் கூரையைப் போட்டு கட்சி அலுவலகத்தை நடத்துவேன் என்றார்.
ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதுதொடர்பாக முடிவெடுப்பேன் என்றார் விஜயகாந்த்.
தமிழகத்தில் தற்போது சபாநாயகரைத் தவிர்த்து மொத்தம் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் மதுரை மேற்குத் தொகுதி காலியாக உள்ளதால், 232 பேர்தான் உள்ளனர்.
ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 34 பேரின் வாக்குகள் தேவை. தற்போது 6 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக கூட்ணிக்கு 166 பேரின் ஆதரவு உள்ளது. அதிமுக கூட்டணியில் 66 பேர் உள்ளனர்.
திமுக கூட்டணிக்கு 4 பேரை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் ஐந்தாவதாக ஒரு எம்.பியை தேர்வு செய்ய வேண்டுமானால் விஜயகாந்த்தின் ஆதரவு தேவை. மேலும், எதிர் தரப்பிலிருந்து ஓரிரு எம்.எல்.ஏக்களின் ஆதரவை உருவ வேண்டும்.
அதேபோல, அதிமுக சார்பில் ஒருவரை உறுதியாக தேர்வு செய்து விடலாம். 2வது எம்.பியை தேர்வு செய்ய வேண்டுமானால் விஜயகாந்த் ஆதரவும், மேலும் ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவும் அவர்களுக்குத் தேவை.
எனவே விஜயகாந்த் ஆதரவு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.