ஹைதராபாத்: பலியானோர் எண்ணிக்கை 14 ஆனதுநகரில் பந்த்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்:நேற்று ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள 400 வருடம் பழமையான மெக்கா மசூதியில் நேற்று ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகைகாக குவிந்திருந்தபோது, பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 40 படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை ஓஸ்மேனி்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 உயிரிழந்தனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வர தாமதமானதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, போலீஸார் மீதும், அங்குள்ள கடைகள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று முழு கதவடைப்பு:
இந்த வெடிகுண்டு சம்பவத்தை எதிர்த்து ஹைதராபாத் நகர் முழுவதும் இன்று முழுகதவடைப்பு நடத்தப்படுகிறது. அனைத்திந்திய முஸ்லீம் சங்கங்கள் இந்த முழு கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிசோடி கிடக்கின்றன. எனினும் மருத்துவமனை, காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன.
அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு பிரிவினரும், சிறப்பு காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதிகள், கோவில்கள் என மத சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த சம்பவத்தை எதிர்த்து அமைதி பேரணி நடத்திவருகிறது. இதுவரை எந்தவிதமான வன்முறை சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.