புத்தியை மறைத்த கள்ளக்காதல்:வீடு புகுந்து ஏட்டை அடித்த பெண் எஸ்.ஐ.
சென்னை:தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண் சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலரின் வீடு புகுந்து அவரையும், அவரது மனைவியையும் அடித்து உதைத்ததாக கைது செய்யப்பட்டார்.
சென்னை குன்றத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டு மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் வெங்கடேசன். அப்போது அங்கு பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்தார் சுஜாதா என்பவர்.
இரவு நேர ரோந்தின்போது வெங்கடேசனின் பைக்கில்தான் சுஜாதா செல்வார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, கள்ளக் காதலாகியுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இது சக காவலர்களுக்கும், ஊருக்கும் தெரிய வந்தது.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் பறந்தன. இதைத் தொடர்ந்து சுஜாதாவை கிண்டிக்கும், வெங்கடேசனை மத்திய குற்றப் பிரிவுக்கும் மாற்றினர். அப்படியும் விடாமல் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் மகாலட்சுமிக்குத் தகவல் தெரிந்து அவர் வெங்கடேசனைக் கண்டித்துள்ளார். இதையடுத்து வெங்கடேசன் தற்காலிகமாக சுஜாதாவை சந்திப்பதைத் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, தன்னிடம் வெங்கடேசன் செக்ஸ் தொல்லை செய்ததாக புகார் கொடுத்தார். அதன் பேரில் வெங்கேடசன் கைது செய்யப்பட்டார், சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
பின்னர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு குன்றத்தூருக்கு மாற்றப்பட்டார். சுஜாதாவை தேனி மாவட்டம் போடிக்கு மாற்றினர். அப்படியும் விடாமல் தொலைபேசியில், வெங்கடேசனிடம் பேசி வந்துள்ளார் சுஜாதா. ஒரு கட்டத்தில் வெங்கடேசன் சுஜாதாவுடனான தனது தொடர்புகளை விட்டு விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா தேனியிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தார். வெங்கடேசன் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற அவர் அங்கு அவருடன் சண்டை போட்டார். அப்போது குறுக்கிட்ட மகாலட்சுமி, முதலில வீட்டை விட்டு வெளியே போ என்று கோபமாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த சுஜாதா, மகாலட்சுமியைப் பிடித்துத் தள்ளியுள்ளார். சரமாரியாக அடிக்கவும் செய்தார். அவரைத் தடுக்க முயன்ற வெங்கடேசனையும் சரமாரியாக அடித்தார். இதனால் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸார் வந்து சண்டையை விலக்கி விட்டனர். பூந்தமல்லி உதவி ஆணையர் மோகன் முன்பு இருவரும் நிறுத்தப்பட்டனர். சுஜாதாவிடம் மோகன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
இரு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சுஜாதா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications