அடுத்து அடிதான்! ராமதாஸ் வார்னிங்
சென்னை:மதுக் கடைகளை தமிழக அரசு மூடாவிட்டால் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் பாமக ஈடுபடும் என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூடி, பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி கடந்த ஒரு வாரமாக பாமக மகளிர் அணி சார்பில் பிரசாரம் நடத்தப்பட்டது.
நேற்றுடன் சென்னையில் முடிவடைந்த பிரசாரத்தின் நிறைவாக புரசைவாக்கத்தில் ராமதாஸ் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராமதாஸ், பள்ளிப் பருவத்திலேயே நமது இளைஞர்கள் குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். பத்து ஆண்டுகளில் அதற்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள். அதுவும் அரசே நடத்துகிறது. இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியுமா.
வீடு கெட்டால் என்ன, நாடு கெட்டால் என்ன, அரசுக்கு வருமானம் வர வேண்டும். இப்போது முன்பை விட 3 மடங்கு வருமானம் வருகிறதாம். அதாவது குடிப்பவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகி விட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நாம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தின்போது என்னையும் கைது செய்தனர்.
எங்களது கட்சியில் குடிகாரர்களுக்கு இடம் இல்லை. இரவில் யாருக்கும் தெரியாமல் குடிப்பவர்களைக் கண்காணிக்க ரகசிய ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
முதல்வர் கருணாநிதி மதுக் கடைகளை மூட நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் மதுக் கடைகளை அடித்து நொறுக்கி சிறை நிரப்புகிற போராட்டத்தை நடத்த மகளிர் அணி மட்டுமல்ல, அனைவருமே தயாராக இருக்கிறோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications