பாலாற்றில் அணை கூடாது: ரெட்டிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஏற்க முடியாது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ரெட்டிக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்
தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் குடிநீர்ப் பற்றாக்குறை மாவட்டங்கள் என்பதால் இந்த மாவட்டங்களில் வாழும் மக்களின் குடிநீர்த் தேவைக்கு பாலாற்று நீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை நீண்ட காலமாக நிலவுகிறது.
கல்பாக்கம் அணு மின் நிலையமும் அதைச் சுற்றியுள்ள நகரியமும் பாலாற்று நீரையே சார்ந்திருக்கின்றன. எனவே பாலாற்றைக் குறுக்கிட்டு அணை கட்டுவதென்பது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிகப் பெருமளவுக்கு குடிநீர் பிரச்சினையை உருவாக்கி விடும்.
1892ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மெட்ராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமானால், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமானால், அது 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தில், குறிப்பிடப்பட்டுள்ள உரிமையை பெரிதும் பாதிக்கும்.
எனவே கணேசபுரத்தில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையை தமிழக அரசு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.