புலிகளைத் தாக்க பாக். போர் விமானங்களைஇரவல் கேட்கும் இலங்கை!
கொழும்பு: விடுதலைப் புலிகளின் வான் புலிகள் தாக்குதலைச் சமாளிக்க நவீன போர் விமானங்களைத் தருமாறு கோரிய இலங்கையின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
வான் வழித் தாக்குதல்களில் நிபுணத்துவும் பெற்றுள்ள விடுதலைப் புலிகள் இதுவரை மூன்று முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இலங்கை படைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
இதுவரை விடுதலைப் புலிகள் சாதாரண அளவில் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பெரும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்பதால், வான் புலிகளை சமாளிக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
வான்புலிகளின் விமானங்களை தாக்கவும், புலிகளின் முகாம்களை அழிக்கவும் பாகிஸ்தானிடமிருந்து எப்17 ரக போர் விமானங்களை இரவலாகத் தரும்படி இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது.
போர் விமானங்களை தருவதற்கு பதிலாக 22 அல்சாரார் வகை டாங்கிகளை விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு பாகிஸ்தான் கூறியுள்ளதாம். மேலும், இலங்கை படையினருக்கு வான் புலிகளின் விமானங்களை தாக்க பயிற்சி தரவும் பாகிஸ்தான் முன்வந்துள்ளதாம்.
பாகிஸ்தானின் இந்த யோசனைக்கு இதுவரை இலங்கை தரப்பிலிருந்து பதில் ஏதும் இல்லையாம்.