ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல்
காரைக்குடி:மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன்.
2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
அதன்படி தனக்கு வந்த தபாலை பிரித்துப் பார்த்தார் பழனியப்பன். அந்தத் தபால் தேவகோட்டையிலிருந்து வந்தது. அதில், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியதுள்ளது. எனவே நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டைக் குண்டு வைத்துத் தகர்த்து விடுவோம், இவண் விடுதலைப் புலிகள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அந்தப் பெண் பழனியப்பனைத் தொடர்பு கொண்டு, கடிதம் கிடைத்த 78 மணி நேரத்திற்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார் பழனியப்பன். போலீஸார் விரைந்து சென்று பழனியப்பன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்தனர் ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
தற்போது பழனியப்பனின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.