அப்துல் கலாமைக் கைவிட்டது பாஜக;மீண்டும் பதவி கிடையாது - வாஜ்பாய்
டெல்லி:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இது அவருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
அப்துல் கலாமின் குடியரசுத் தலைவர் பதவி முடிக்கு வருகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை அறிய நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
ஆரம்பத்தில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க பல கட்சிகள் விருப்பம் கொண்டிருந்தன. ஆனால் முக்கிய கட்சிகள் சில வேறு வேட்பாளர் குறித்து பேச ஆரம்பிக்கவே இந்த கட்சிகளும் இப்போது கலாமை கை கழுவி விட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்னிறுத்தப்படவுள்ளார். இடது சாரிக் கட்சிகளும் இவரையே ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை உறுதியான பெயர் எதுவும் எழவில்லை.
இந்த நிலையில் அப்துல் கலாமுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அப்துல் கலாமுக்கு மீண்டும் பதவி கிடைக்காது. அதை அவரிடம் முறைப்படி தெரிவித்து விட்டோம்.
கருத்தொற்றுமையுடன் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகள் எப்போதும் உண்டு. அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டபோதும் கூட கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன என்றார் வாஜ்பாய்.
உ.பியில் ஆட்சியைப் பிடித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவும் முக்கியமாக தேவை. எனவே அவரது ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைப் பெற்ற தனது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜி, டாக்டர் கரண் சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் உள்ளன.












Click it and Unblock the Notifications