ஞாயிறு முதல் தென் மேற்கு பருவ மழை!
சென்னை:கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவ மழை தொடங்கும்.
இந்த ஆண்டு முன் கூட்டியே பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கும் இந்த மழையால் கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை திருப்திகரமான அளவுக்கு இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.