மாண்ட ஆண்டவர் பிணவறையில் மீண்டார்!
தேனி:இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர்.
உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர்.
அவரது உடல் ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் உடல் தரப்படும் என டாக்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் சாந்தம்பாறையைச் சேர்ந்த ஆண்டவர் என்ற பெயர் கொண்ட இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த நிலையில், கூட்டப்பன்பேரி ஆண்டவரின் உடலை ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மயக்கத்தில் இருந்த ஆண்டவர் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து ஆண்டவர் நலமடைந்து விட்டதை உறுதி செய்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அட, ஆண்டவா!












Click it and Unblock the Notifications