For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் டாஸ்மாக் பார் விபத்துபலி 28 ஆனது - முதல்வர் உதவி

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்திருப்பூரில் டாஸ்மாக் மதுக் கடை பார் மீது கருங்கல் சுற்றுச் சுவர் விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் கருணாநிதி நிதியுதவியை அறிவித்துள்ளார்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அங்கேரிபாளையம் என்ற இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே சுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமான பனியன் ஆலை உள்ளது. ஆலையைச் சுற்றிலும் 22 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 100 அடி நீளத்திற்கு கருங்கற்களால் ஆன சுற்றுச் சுவரை அமைத்துள்ளார் சுப்ரமணியம்.

சுவரையொட்டி கடைக்குப் பின்புறம் மதுக் கடையின் பார் உள்ளது. நேற்று மாலை திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மதுக் கடையில் குடிகாரர்களின் கூட்டம் அலைமோதியது.

Tirupur wal collapses

இரவு ஏழரை மணியளவில் மது பாரில் கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சுற்றுச்சுவர் அப்படியே விழுந்தது. பாருக்குள் விழுந்த சுற்றுச்சுவர் கற்கள் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை மூடி அமுக்கியது.

கருங்கல் சுவர் என்பதால் உள்ளே சிக்கியவர்களால் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியானார்கள். தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

4 ஜேசிபி இயந்திரங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மிகுந்த சிரமத்திற்கிடையே இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலரது உடல், முகம் ஆகியவை நசுங்கி, சிதைந்து அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயிருந்தது.

சம்பவ இடத்திலேயே 27 பேர் இறந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் இன்று காலை இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், எஸ்.பி. துரைக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் திண்டுக்கல் பெரியசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, ஏ.வ.வேலு ஆகியோர் விரைந்து வந்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் குவிந்திருந்த இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அவர்கள் ஆறுதல் கூறினர்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பனியன் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் 7 பேர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை முழுவதும் மதுக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 28 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான பனியன் ஆலை அதிபர் மற்றும் மது பார் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் நிதியுதவி

இதற்கிடையே திருப்பூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கவும், காயமடைந்த 7 பேருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X