மாறன் மகள் வளைகாப்பு: கருணாநிதி குடும்பம்புறக்கணிப்பு
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
மதுரை தினகரன் நாளிதழ் மீதான தாக்குதலுக்குப் பிறகு கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் பிளவுபட்டு நிற்கிறது. மாறன் குடும்பத்தை கருணாநிதி குடும்பம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. அதேபோல சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சன்னுக்குப் போட்டியாக திமுக சார்பில் கலைஞர் டிவி தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இரு குடும்பத்திற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. கடைசி முயற்சியாக மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி கருதப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது கருணாநிதி குடும்பத்தினரை கலந்து கொள்ள வைக்க மாறன் குடும்பத்துத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கருணாநிதி, மாறன் குடும்பங்களுக்கு இடையே சமரசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் இன்று காலையிலேயே டெல்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை பக்கம் சுற்றுப்பயணத்தில் உள்ளார். மற்றவர்கள் யாரும் வளைகாப்புக்குப் போகவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் (இவர் முரசொலி மாறனின் சகோதரர்) ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாறன் குடும்பத்து நிகழ்ச்சியை கருணாநிதி குடும்பத்தினர் புறக்கணித்ததன் மூலம் கடைசி சமரச முயற்சியும் தோல்வி அடைந்து விட்டதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications