ஹெல்மெட்- பெண்களுக்கு விதிவிலக்கு கோரும் ராமதாஸ்
சென்னை: இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,
ஜூன் மாதம் முதல் மாநாகராட்சிகளிலும், ஜூலை முதல் மற்ற பகுதியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் நலனை கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு இந்த நிபந்தனை தளர்த்தப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர், முக்கியமாக தாய்மார்களிடமிருந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
திடீரென ஏற்படும் அவசர வேலைகள் காரணமாக இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுபவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனை சாத்தியமல்ல. தாய்மார்களுக்கும் இந்த நிலைமை ஏற்படுகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என பல வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும், சீக்கிய மக்களுக்கும், பின்னால் அமரும் பெண்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தமிழகத்திலும் விதிவிலக்கு அளிக்கலாம்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமரும் ஆண்கள் ஹெல்மெட் அணிவதா, வேண்டாமா என்பதை அவர்கள் விருப்பதிற்கு விட்டுவிடலாம். உயிர்மீது ஆசையில்லாதவர்கள் யாருமில்லை.
எனவே இருசக்கர வாகனங்களில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கும், ஆண்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கும் விட்டுவிடவேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications