தென் மேற்கு பருவ மழை தொடங்கியது
சென்னை:கேரளாவிலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதிதான் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.
திருவனந்தபுரம், மலப்புரம், ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்றும் மழை வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பருவ மழை தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமும் காணப்படுகிறது. கன மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவதால் தமிழகத்தில் வெட்கை தணிந்து குளுமை குடிபுகும் என்று மக்கள் நிம்மதியுடன் உள்ளனர்.