மணிரத்தினம் தம்பி மலையில் இருந்து விழுந்து பலி
சென்னை:இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா (கடைசி இருவரும் இரட்டையர்கள்) ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன்.
அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழுந்தார். மனைவி, மகள்கள் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார் சீனிவாசன்.
3 மணி நேர முயற்சிக்குப் பின்னர் சீனிவாசனின் இறந்த உடல் மீட்கப்பட்டது. பின்னர் குலுமனாலியிலிருந்து சீனிவாசனின் உடல் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று சென்னைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.
சீனிவாசன் மரணம் குறித்து கேன்ஸ் பட விழாவுக்குச் சென்றிருந்த மணிரத்தினத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது பிரான்ஸிலிருந்து ஸ்பெயின் சென்றுள்ளார். தம்பியின் மரணச் செய்தியை அறிந்த அவர் ஸ்பெயின் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.
மணி ரத்னத்தின் அண்ணனான தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் (ஜிவி) சில ஆண்டுகளுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜிவியும் சீனிவாசனும் அக்கா-தங்கைகளான சுஜாதா, சந்தியா ஆகியோரை மணந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.