அழகிரி அழைப்புக்கு காத்திருக்கும் ஸ்டாலின்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அழகிரியுடன் சேர்ந்து கூட்டாக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரி மகள் திருமணத்தை நடத்தி வைத்தார் ஸ்டாலின். இத் திருமணத்துக்கு மு.க.அழகிரி தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அழகிரி,
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நானும் தம்பி ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் வெற்றியில் அமைச்சர் பொன்முடியின் உழைப்பும் அடங்கும். திமுகவிற்கு எத்தகைய சோதனை வந்தாலும் அதற்கு பொன்முடி பக்கபலமாக இருக்கிறார்.
தற்போது ஏற்பட்ட சோதனையில் கூட அவர் சபாநாயகராக இருந்து தீர்த்து வைத்தார். தன் நண்பரைவிட தலைவருக்காக அவர் வாதாடியதை நான் அறிந்தேன்.
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பணிக்காக அமைச்சர் பொன்முடி 15 நாட்கள் எங்களுக்காக ஒதுக்கி பணியாற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின்,
அண்ணன் அழகிரி பங்கேற்றுள்ள இந்த திருமணத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. முன்பெல்லாம் சீர்த்திருத்த திருமணங்கள் என்றால் ஆச்சரியப்படுவார்கள். 1967 முன்பு சீர்த்திருத்த திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அண்ணா முதல்வரானபோது இத்திருமணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
தற்போது மக்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி 4 கட்டமாக வழங்கவிருக்கிறோம். இதற்கான மொத்த நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அமைச்சர் பொன்முடி தேர்தல் பணியாற்றியதைப் போல மேற்கு தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அண்ணன் அழகிரி சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
அதே போல மதுரை மேற்கு தொகுதியில் அண்ணன் அழகிரி மற்றும் தொண்டர்களுடன் தேர்தல் பணியாற்ற நானும் காத்திருக்கிறேன், அழைத்தால் நிச்சயம் வருவேன் என்றார்.