For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி சீட் கொடுக்காததால் கோபம் இல்லை:கருணாநிதிக்கு நன்றி - கே.பி.கே.குமரன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. என்னை எம்.பி. ஆக்கியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்று முன்னாள் தினகரன் உரிமையாளர் கே.பி.கே. குமரன் கூறியுள்ளார்.

தினகரன் நாளிதழை நிறுவியவர் மறைந்த கே.பி.கந்தசாமி. அவரது மறைவுக்குப் பின்னர் அவரது புதல்வர் கே.பி.கே.குமரன் தினகரனை நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் சன் டிவி குழுமத்திடம் தினகரன் நாளிதழை விற்றார் குமரன். இதனால் குமரனின் மாமனாரான தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் மிகுந்த வருத்தமுற்றதாக கூறப்பட்டது.

இதே அதிருப்தியில் நடிகர் சரத்குமாரும் இருந்து வந்தார். சரத்தின் சகோதரி கணவர்தான் கே.பி.கந்தசாமி.

இதையடுத்து திமுகவிலிருந்து வெளியேறினார் சரத்குமார். தனது ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சரத்குமாரால் காலியான எம்.பி. பதவி பதவி குமரனுக்கு தரப்பட்டது.

இந் நிலையில் குமரனின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. மாறன் சகோதரர்களுக்கும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் பிரச்சினை வெடித்துள்ளதால் மீண்டும் குமரனுக்கு சீட் கிடைக்காது என்று கருதப்பட்டது.

அதன்படியே தற்போது குமரனுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை.

இந்த நிலையில் சீட் கிடைக்காததால் தனக்கு அதிருப்தி இல்லை என்று கூறியுள்ளார் குமரன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் கருணாநிதி எடுக்கும் எந்த முடிவும் தமிழக மக்களுக்கு நன்மையளிப்பதாகவே இருக்கும்.

என் வளர்ச்சியில் முதல்வர் கருணாநிதி தனி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், மாநிலங்களவை எம்பி பதவி குரமனுக்கு தரப்படாதது ஏன் என்று கேட்டு முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் வெளியான கருத்துகளில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை.

முதல்வர் கருணாநிதி எடுக்கும் எந்த முடிவும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். அவரது குடும்ப நலனை கருத்தில் கொண்டு இருக்காது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்னை எம்பியாக நியமித்ததை பெருமையாக கருதுகிறேன். இந்திய அரசின் சார்பில் ஐ.நா. சபையில் உரையாற்றிய பெருமையை ஏற்படுத்தி கொடுத்தவர் முதல்வர்.

என் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி, என் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வரும் அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் குமரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X