கருணாநிதி குடும்பத்தில் இன்னும் அதிகாரபோட்டி வெடிக்கும்: மாஜி மந்திரி
கோவை:கருணாநிதி குடும்பத்திற்குள் இன்னும் அதிகமாக அதிகார போட்டி வெடிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
கோவையில் மாநகராட்சி பூங்கா கட்டடத்தில் இயங்கி வந்த அதிமுக மகளிர் மன்றத்தை மாநகராட்சி கைப்பற்றியதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்,
கோவை செல்வபுரம் பகுதியில் திமுக, மதிமுக, தமுமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 12க்கும் மேற்பட்ட மன்றங்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த பகுதியின் அரசு இடங்களில் திமுகவினர் 8 வீடுகளை கட்டி வாடகை வசூலிக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் 3 திமுக அலுவலகங்களும், தமுமுக அலுவலகமும், மதரசா பள்ளியும் கட்டப்பட்டுள்ளன.
இதில் ஒரு சென்ட்டுக்கும் குறைவான இடத்தில்தான் அதிமுக மன்றம் அமைந்துள்ளது. மற்ற மன்றங்கள் அப்படியே இருக்கும்போது, இந்த மன்றத்தை மட்டும் இடிப்பதாக தகவல் வந்தது. அதனால் சாலை மறியல் செய்தோம்.
இதற்காக 5 எம்எல்ஏக்கள் உள்பட 83 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருணாநிதி குடும்பத்திற்குள் அதிகார போட்டி இன்னும் பெரியதாக வெடிக்கும். தயாநிதி ஆதரவாளர் என்ற முத்திரை பொங்கலூர் பழனிச்சாமிக்கு இருக்கிறது. இதை மறைக்கவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்க போலீஸாரை தூண்டியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications